
உற்சாகமாய் வழியனுப்பி வைத்தது எத்தனை உறவுகளோ? உற்சாகமாய் வரவேற்க காத்திருந்தது எத்தனை உறவுகளோ? எத்தனை பேரின் சந்தோசங்கள் இன்று நிலைகுலைந்து போயிருக்கிறது என்று எண்ணிப் பார்க்கவே முடியாத ஒரு பெருந்துயரம் இது. இந்தியப் பெருங்கடலில் MH370 விபத்துக்குள்ளாகி மூழ்கி மறைந்து விட்டதென்றும் அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மலேசிய பிரதமர் அதிகாரப்பூர்வமாய் அறிவித்ததும் அது இந்த உலகத்தின் மீதே இடியை இறக்கியது போலத்தான் இருந்தது.
விசாரணை அதிகாரிகள் விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவல்கள் மற்றும் செயற்கைக்கோள் மூலம் கிடைத்த தகவல்களை கொண்டு விசாரித்து வருகின்றனர். விமானம் பறக்க ஆரம்பித்து அது இலக்கைச் சென்று அடையும் வரையில் தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொண்டிருக்கும் வகையில் எல்லா நவீன அம்சங்களும் இப்போது உண்டு. பிறகு எங்கே நிகழ்ந்தது பிழை? எப்படி மறைந்தது விமானம்? எங்கே கிடக்கிறது அதன் உடைந்த பாகங்கள்....? கடலிலா? காடுகளிலா? கட்டாந்தரையிலா? மலைகளுக்கு நடுவா? அல்லது மொத்தமாய் எங்கே போனது அந்த விமானம்? எங்கே போயினர் அந்த விமானத்தில் பயணித்த அத்தனை பேரும்....?
கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே திருப்தியடைந்து கொள்ளும் மனித மனங்கள் குழம்பித்தவித்தன. பலவிதமான அனுமானச் செய்திகளை வெளியிட்டும் கேட்டும் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தன. உலக நாடுகள் எல்லாம் இந்த பூமியைத் தங்கள் சக்திக்கு மீறி சல்லடை போட்டு சலித்தும் பார்த்துவிட்டனர்.... ஆனால்...எம்.எச் 370 என்னும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
எத்தனை காலம் எடுத்தாலும் நம்பிக்கையோடு காத்திருப்போம் MH 370
0 கருத்துகள்:
கருத்துரையிடுக