வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

தொலைபேசி உரையாடலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கம்

மானிடப்பிறப்பெடுத்த நாம் ஒவ்வொருவரும்  நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்ள கண்டிப்பாக பிறருடன் தொடர்பு கொள்ள வேண்டும். நாம் பல வகையான ஊடகங்கள் வழி பிறருடன் தொடர்பு கொள்ளலாம். நாம்  இணையத்தின் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் மற்றும் நேரிடையாகவும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம். பிறருடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்படும் முறைகளுள் மிகவும் பிரபலமான ஒன்று தொலைபேசி உரையாடல். மிக தூரத்தில் உள்ளவரிடமும் அருகில் உள்ளவரிடமும் மிக எளிதான முறையிலும் குறிப்பிட்ட நேரத்திலும் தொடர்பு கொள்ள தொலைபேசி பெரிதும் துணைப்புரிகின்றது.

சிறுவர் முதல் பெரியவர் வரையில், அனைவராலும் மிக எளிதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது தொலைபேசி. தொலைபேசி உரையாடலின் போது, நமது முகம் அதில் தெரியாது ; மாறாக ஒருவரின் குரல் மட்டுமே மற்றவரால் செவிமடுக்க முடியும். எனவே, தொலைபேசி உரையாடலின் போது  நாம் மிகுந்த பணிவாகவும் ஏற்ற தொனியுடனும் பேச வேண்டும்.  மறுமுனையில் இருந்து நம்முடன் பேசுபவர் நம்மீது நல்ல மதிப்பைக் கொண்டிருக்க இது துணைப்புரிகிறது.

    தொலைபேசியில் உரையாடும் போது மரியாதைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். தொலைபேசியில் தொடர்பு கிடைத்தவுடன் முதலில் வணக்கம் கூறுவது சாலச் சிறந்தது. நம்மை முதலில் அறிமுகஞ் செய்து கொள்வதுடன் யாரிடம் பேச விரும்புகிறோம் என்பதையும் சொல்ல வேண்டும். உரையாடலின் இறுதியில் நன்றி கூற வேண்டும். தொலைபேசி உரையாடலில் இரு தரப்பினரும் பணிவாகப் பேசுவதன் மூலம் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளலாம். மேலும் மரியாதையுடனும் பண்புடனும் பேசுவதால் நம்முடன் பேசுவரின் நன்மதிப்பைப் பெறவும் வாய்ப்புண்டு. தொலைபேசியில் பேசுவோரிடம் நாம் என்ன செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறோமோ அதனை மிகவும் தெள்ளத்தெளிவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் தெரிவிக்க வேண்டும். சொல்ல வந்த தகவலைத் துள்ளியமாக கூறாமலும் , வழவழவென பேசுவதாலும் நமது மறுமுனையில் பேசுவோரின் எரிச்சலுக்கு ஆளாக நேரிடும். மேலும் அவர் நம்மீது தவறான எண்ணங்கொள்ள வழிவகுத்துவிடும். எனவே, தொலைபேசியைப் பயன்படுத்தும் முன்னரே அதனை எவ்வாறு நன்முறையில் பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்து கொள்வோமாக.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக