செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

பிற இன நிகழ்வில் கலந்துக் கொள்வோம்




மலேசியாவில் பல இன மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வோர் இனத்தவரும் தங்களுக்கெனத் தனி பாரம்பரியப் பண்பாட்டினைக் கொண்டுள்ளனர். மலேசியாவில் அனைவருக்கும் விழாக்களையும் பண்டிகைகளையும் கொண்டாட சுதந்திரம் உண்டு. அதே வேலையில் ஒருவர் மற்றவரின் மனம் வருந்துமாறு உணர்சிகளைத் தூண்டக் கூடாது. அவர்களிடையே வெறுப்பு உண்டாகமால் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நாட்டின் ஒற்றுமைக்கும் வளப்பத்திற்கும் வழி வகுக்கும்.

 
 
பிற இன நண்பர்களை நம் வீட்டு பண்டிகைகள், விசேஷங்களுக்கு அழைக்கும் போது நாம் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.நாம் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வினை நடத்தும் போது அந்நிகழ்வில் தயாரிக்கப்படும் உணவானது அனைத்து இனத்தவரும் உண்ணும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.

 

நாம் அனைவரின் சமய பண்பாட்டுக் கூறுகளைக் கருத்தில் கொண்டு ஏற்புடைய உணவு வகைகளைத் தயார் செய்து பறிமாற வேண்டும். இது மலேசிய மக்கள் கடைப்பிடிக்கும் நற்பண்பாகும். உதாரணத்திற்கு மலாய்கார ர்கள் பன்றி இறைச்சியை உண்ண மாட்டார்கள்; இந்தியர்களோ மாட்டிறைச்சியை உண்பதைத் தவிர்க்கின்றனர். எனவே திறந்த இல்ல உபசரிப்பு மற்றும் பண்டிகைகள், விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் இது போன்ற உணவுகளைப் பறிமாறுவதைத் நாம் தவிர்க்க வேண்டும். சாதாரண உணவு விஷயம் என்று பாராமல் பிற இனத்தவரின் ஒவ்வொரு சின்னஞ் சிறிய விஷயத்தையும் நாம் கருத்தில் கொண்டு நாம் நடந்துக் கொள்ள வேண்டும். பிற இனத்தவர் என்று கருதாமல் நாம் வீட்டிற்கு வருபவர்களை நம் உறவினர்கள் போல் நினைத்து இன்முகத்துடன் வரவேற்று அவர்களை நல்ல முறையில் உபசரிப்பது மிகச் சிறந்த பண்பாகும்.

 

மலேசியாவின் ஒரு சிறந்த குடிமகனாக நாம் பிற இனத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாட வேண்டும். பண்டிகைகள், விழாக்கள், திருமணம், பிறந்தநாள் விழா முதலிய நிகழ்வுகளில் ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்துக் கலந்து கொள்வது மலேசியரின் தனிச் சிறந்த பண்பாகும். இதனால் மற்ற இனத்தவரின் சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.


நாம் புரிந்துணர்வையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்து ஒற்றுமையாக வாழலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக