செவ்வாய், 2 செப்டம்பர், 2014

நல்லெண்ண விருந்து

மலேசியாவில் பண்டிகையின் போது நல்லெண்ண விருந்து நிகழ்வினை ஆங்காங்கே நடத்துவது பழக்கமாகவிட்டது. குறிப்பாக ஹரிராயா, தீபாவளி, சீனப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் போன்ற மலேசியர்களின் முக்கிய பெருவிழாக்களின் போது ஆங்காங்கே நல்லெண்ணவிருந்து நடைபெற்று வருகிறது.

நல்லெண்ண விருந்து என்பது பண்டிகையின் போது மற்ற இனத்தவர்களோடு இணைந்து கொண்டாடப்படும் விருந்துபசரிப்பு ஆகும். இரு பண்டிகைகளை இணைத்தும் நல்லெண்ண விருந்து கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக தீபாராயா (Deeparaya), கிறிஸ்மஸ் புத்தாண்டு ஆகும்.

நல்லெண்ணவிருந்து பொதுவாக உயரிய பதவி வகிப்பவர்களின் வீட்டில் நடைபெறும். பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் அதிகாரிகள் போன்றோர் அதிக அளவில் நல்லெண்ண விருந்தை விமரிசையாகக் கொண்டாடுவர். ஆனால் இன்று பொது இயக்கங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது மக்கள் என அனைவருமே நல்லெண்ண விருந்தினை நடத்துகின்றனர். மேலும் வீட்டில் மட்டுமே நடந்த இந்நிகழ்வு இன்று பெரிய மண்டபங்களில்  இசைநிகழ்ச்சியோடு நடைபெறுகிறது.

நல்லெண்ண விருந்துக்கான  முக்கிய நோக்கம் மக்களிடையே ஒற்றமை வலுவடையும் என்பதே ஆகும். ஆம் பல இன மக்கள் வாழும் நம் நாடு சுபிட்சமாக இருக்க ஒற்றுமை மிக முக்கியமாகும். எனவே தான் ஆண்டு தோறும் நல்லெண்ண நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பிற இன மக்கள் கலந்து கொள்வதால் மற்றவர்களுடைய பண்டிகையைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் அறிய முடிகிறது. எடுத்துக் காட்டாக, சீனப் புத்தாண்டின் போது, சீன மக்கள் மட்டும் அல்லாது பிற இனத்தவர்களும் சீன பாரம்பரிய உடையை உடுத்தி மகிழ்ச்சியாக நல்லெண்ண விருந்தில் கலந்து கொள்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் நல்லெண்ண விருந்தில் உடல் பேறு குறைந்தோர், வசதியற்றோர் போன்றவர்களுக்கும் சில பரிசுகளும் அன்பளிப்பு பணங்களும் வழங்கப்படுகிறது.இதன் வழி ஒட்டு மொத்த மலேசியர்களும் பெருநாட்களை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.


 இன்று அனைத்து மலேசியர்களும் மற்ற இனத்தவர்களின் கலாச்சாரம்,பண்பாடு,உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள நல்லெண்ண விருந்து பெரும் பங்காற்றுகிறது என்பது வெள்ளிடைமலையாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக